Friday 26th of April 2024 01:29:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டமே இரணைமடு குடிநீர்; சிறிதரன்!

இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டமே இரணைமடு குடிநீர்; சிறிதரன்!


"இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்."

- இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சி.சிறிதரன் தெரிவித்தார்.

பூநகரி, முக்கொம்பன் பகுதியில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:-

"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து யார் எங்கு குடியேறினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். 1901ஆம் ஆண்டு இரண்டு மடுக்களாக இருந்ததை இணைத்து இரணைமடுவாக ஆங்கிலேயர்கள் ஒரு குளத்தைக் கட்டினார்கள். குளம் உருவாக்கப்பட்ட பிற்பாடு அந்தக் குளத்தைச் சூழ மக்கள் அந்தத் தண்ணீரை நம்பி குடியேறினார்கள். யாழ்ப்பாணத்திலும் ஆங்கில மொழி மூலம் படித்த எட்டாம் வகுப்புக்கு மேல் சித்தி பெற்றவர்களைக் காணி கொடுத்து அங்கே குடியேற்றினார்கள். அந்தக் குடியேற்றத் திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பல ஊர்களில் இருந்தவர்களும் அங்கு குடியேற்றப்பட்டார்கள். அதனைவிட 1956,1983ஆம் ஆண்டு தென்பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளாலும் பெரும்பகுதியான மக்கள் அந்த மண்ணிலே வந்து குடியேறினார்கள்.

இன்றைக்கு மலையகப் பகுதிகளில் இருந்த பல மக்கள் அங்கு குடியேறி வாழ்கின்றார்கள். இவ்வாறு காலத்துக்குக் காலம் விவசாயம் செய்து கொண்டு வருகின்றபோது இப்போது 42 ஆயிரம் ஏக்கர் வயல்கள் அக்குளத்துக்குக் கீழ் விவசாயம் செய்யக் கூடிய நிலம் உள்ளது.

42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்தில் 20 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்துக்கு மட்டுமே நீர் பாய்ச்சக் கூடிய வாய்க்கால்கள் உண்டு. மிகுதி 22 ஆயிரம் ஏக்கர்களும் மானவாரி நிலங்கள். வாய்க்கால்கள் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் வயல்களில் ஆகக் கூட 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சிறுபோகம் செய்யக் கூடியதாக உள்ளது. இது புனரமைப்பு செய்வதற்கு முதல் 7 ஆயிரம் அல்லது 8 ஆயிரம் ஏக்கர்களாக இருந்தன. அதிலும் கடந்த வருடம் 15 ஆயிரம் ஏக்கர் விதைத்து இறுதி நேரம் தண்ணீர் இல்லாமல் குளத்தில் பக்கோ போட்டு வெட்டித்தான் தண்ணீர் எடுத்தார்கள். குடிக்கவும் தண்ணீர் வைத்திருக்கவில்லை. குளத்தில் கடைசி 10 அடி தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விதி உண்டு. காரணம் மாடுகள், உயிரினங்கள் குடிப்பதற்காக அதனையும் தாண்டி கடந்த முறை தண்ணீரை வெட்டி எடுத்தார்கள்.

இம்முறை சித்திரையில் சிறு மாரி பொழிந்த படியால் இப் பிரச்சினை தோன்றவில்லை. அதனால் குளத்தில் சிறியளவு தண்ணீர் உள்ளது. மற்றைய உயிரினங்களுக்காகக் குடிக்கத் தண்ணீர் தர மாட்டோம் என்று கிளிநொச்சியைச் சார்ந்த யாருமே தெரிவித்தது கிடையாது.

அங்குள்ள விவசாயிகள் கேட்பது வயல் நிலங்களுக்கான உற்பத்தி பிரச்சினைகளை முதலிலே தீருங்கள் என்று. அதற்கு ஏதாவது ஒரு முடிவைச் சொல்லுங்கள். 42 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கருக்குத்தான் தண்ணீர் பாய்ச்சக் கூடியது. அதிலும் 15 ஆயிரம் ஏக்கர்தான் சிறுபோகம் செய்யலாம். இவ்வாறு நிலைமை உள்ளது. அதற்கு ஒரு மாற்றத்தைச் செய்து தாருங்கள் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை.

போர் முடிந்த பின் வன்னிப் பகுதியில் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் எவ்வாறு உயிர் வாழ்ந்தார்கள்? என்று கோட்டாபய ஆராய்ந்தார். பொருளாதாரத் தடை, எரிபொருட்கள் இல்லை, உணவு இல்லை, எந்தவிதமான பொருட்களும் வரவில்லை, இவ்வாறான நிலைமையில் அந்த மக்கள் எவ்வாறு உயிர் வாழ்ந்தார்கள் என்று கோட்டாபய தரப்பினர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்விலே அவர்கள் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். அங்கு இருந்த குளங்களும் அந்தக் குளங்களைச் சூழ இருந்த பயிர்ச்செய்கைகளும் மக்களையும் போராட்டத்தையும் பாதுகாத்திருக்கின்றது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

இவற்றை இல்லாது ஒழிக்க என்ன வழி? யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லுகின்ற ஒரு திட்டத்தை அவர்கள் உருவாக்கினார்கள். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இருப்பவர்கள் கணிசமானவர்கள் குடும்ப உறவுகள்தான். அவர்களை அடிபட வைக்க இதனை ஒரு பெரிய திட்டமாகக் கொண்டுவந்தார்கள். பின்னர் இரணைமடுவில் இருந்து குடிக்கத் தண்ணீர் தருகின்றார்கள் இல்லை என்று மாபெரும் பிரதேசவாதத்தைக் கோட்டாபய தரப்பினர் தரப்பினர் கொண்டு வந்தார்கள்.

அப்போதுதான் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பல விரிவுரையாளர்கள் எங்களை அழைத்துப் பேசி இருந்தர்கள். எங்களுக்குப் பல விளக்கங்களைத் தந்திருந்தார்கள். இந்த அறிவைத் தந்ததே யாழ்ப்பாணம் பல்கழைக்கழகம்தான். அதுவரை எனக்குக்கூட அவ்வளவு விளக்கம் இருக்கவில்லை. விவசாயிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்தார்கள்.

உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் கிளிநொச்சியிலுள்ள பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை என்று? மாரிகாலத்திலும் கோடை காலத்திலும் இப்போதும் நீர்த்தாங்கிகளிலேயே நீர் விநியோகிக்கப்படுகின்றது. அங்குகூட இரணைமடுக் குளத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படுவதில்லை. கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லாறு போன்ற பகுதிகளில் குடிக்கத் தண்ணீர் இல்லை.

கிளிநொச்சியில் குடிக்கத் தண்ணீர் இல்லை. விவசாயம் செய்யத் தண்ணீர் இல்லை. இந்தநிலையில் யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு விரோதத்தைக் கட்டி வளர்க்கலாம் என்று அரசு திட்டமிட்டது. இதனால் மக்கள் சிலரிடம் இந்தக் கேள்வி இருக்கின்றது.

நான்கூட யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. நியாயத்தைச் சொன்னேன். திட்டமிட்ட வகையில் இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE