நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து அளிப்பது தொடர்பில் தமிழரசுக்கட்சிக்குள் கடும் முரண் நிலை எழுந்துள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.
இது குறித்து விரிவாக தெரியவருவதாவது.
தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவது தொடர்பிலான பேச்சு நடத்துவதற்காக தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் எம்.ஏ சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நேற்று முன்தினம் இரவு அவருடைய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர்.
அதன் போது திருகோணமலையில் போட்டியிட்ட குகதாஸனை நியமிக்கவேண்டும் வலியுறுத்தியிருக்கின்றனர். அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா சம்பவம் தொடர்பில் செயற்குழு மற்றும் மத்தியகுழு கூடியே முடிவெடுக்கும் என்பதால் தன்னால் வாக்குறுதி அளிக்க முடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் சுமந்திரனும் சிறீதரனும் நேற்றைய நாள் திருகோணமலைக்குச் சென்று இரா.சம்பந்தன் மற்றும் செயலாளர் துரைராஜசிங்கம் உட்பட்ட முக்கியஸ்தர்களுடன் தேசியப்பட்டியல் தொடர்பில் பேச்சில் ஈடுபட்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் நேற்றைய நாளும் பேச்சில் முடிவுகள் எட்டப்படவில்லை என்று சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இன்று மீண்டும் காலையிலிருந்து குறித்து பேச்சு நடத்தப்பட்டுவரும் நிலையில் இதுவரையில் முடிவுகளை எட்ட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இன்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை தேசியப்பட்டியலில் நியமிக்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் விடாப்பிடியாக வலியுறுத்திவருகின்றதாக தெரியவருகிறது.
இதேவேளை கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கலையரசனை உறுப்பினராக தெரிவு செய்யவேண்டும் முக்கியஸ்தர்கள் சிலர் உறுதியாக தெரிவித்துவருவதாக தெரியவருகிறது.
இந்நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியலை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்மதிக்காமை கட்சிக்குள் முறுகல் நிலையை வலுப்படுத்தியிருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்