மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (செப்-1) அதிகாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மக்கள் பாதிபப்டைந்துள்ளதோடு, உடமைகளுக்கு பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 113 குடும்பங்களைச் சேர்ந்த 362 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 நபர்களும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 146 நபர்களும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 202 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக வீடுகள் சேதமாகியுள்ளதோடு மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் பொது இடங்களிலும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள், கிராம அலுவலகர்கள் சென்று பார்வையிட்டதோடு, மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்