முல்லைத்தீவில் சட்டவிரோத காடழிப்பு, மரக்கடத்தல் சம்பந்தமாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு முறிப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத மரம் வெட்டுதல், மரங்கடத்தல், காடழிப்பு முறைப்பாடுகளை அரசும், வனவளத்திணைக்களமும் தடுக்கத் தவறி வந்திருக்கிறது.
மக்களின் முறைப்பாடுகள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. இத்தகைய கொள்ளை முயற்சிகள் நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் நடைபெறும் செய்திகள் வருகின்றன.
இதனால் அப் பிரதேசங்களுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன், சண்முகம் தவசீலன் ஆகியோர் சட்ட விரோதிகளால், கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் மாவை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மட்டுமல்ல ஏனைய ஊடகவியலாளரதும், ஊடகத்துறையினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடன் கைது செய்யப்பட்டுத் தண்டனை வழங்க வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றோம். அத்தோடு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணமும், இழப்பீடும், நியாயமும் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசை வற்புறத்துகிறோம். எனவும் மாவை சோனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: மாவை சோ.சேனாதிராஜா, இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு