கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரி முனைக் கிராமத்தினுள் நேற்று கடல் நீர் உட்புகுந்திருந்த நிலையில் இன்று யாழ்ப்பாணம் கல்லுண்டாய் கிராமத்தினுள்ளும் நீர் புகுந்துள்ளமையால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தற்போது யாழ்ப்பாணம் உட்பட்ட பகுதிகளில் மழை இல்லாத நிலையிலும் கடல் நீர் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் புகுந்தமையால், J/35, J/36 ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள 87 குடும்பங்களை சேர்ந்த 310 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த அனர்த்த நிலமையினை நேரில் சென்று மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பார்வையிட்டார் .
இவ் அனர்த்த நிலையினை அறிந்து மாவட்ட அரசாங்க அதிபர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர், வலி தெற்கு பிரதேச தவிசாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு இராணுவத்தினருடன் கலந்துரையாடி குறித்த மக்களிற்கான உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.கடல் நீர் தடுப்பணை உடைந்தமை காரணமாகவே கடல் நீர் உட்புகுந்ததாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் ஊடகங்களுக்கு வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றனர்.
இருந்தபோதிலும் கிளிநொச்சி கௌதாரி முனைப் பகுதியில் இவ்வாறான தடுப்பணை காரணம் எதுவும் சொல்லப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத் தக்கது.
கௌதாரி முனையில் கடல் நீர் உட்புகுந்தமையால் நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை பாதிக்கப்பட்டதாக பூநகரி பிரதேச செயலர் தெரிவித்ததுடன், கடல் நீர் உட்புகுந்தமைக்கான காரணம் தெரியவில்லை என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்