இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி பிரவேசித்திருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் நால்வர் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
தமிழ்நாடு கோடியக்கரை பகுதியில் இருந்து பாண்டியன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் நேற்று காலை புறப்பட்டு இலங்கை எல்லைக்குள்ளாக பிரவேசித்து வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளனர். இதையடுத்து குறித்த படகில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துலிங்கம், ராஜ், ரஞ்சித் மற்றும் முருகன் ஆகிய நான்கு மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் மாமுனை கடற்படை முகாமில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைகாரணமாக கட்டுப்பாட்டை இழந்து இயந்திரக் கோளாறுக்குள்ளான கடல் அலைகளில் சிக்கி இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் எச்சரிக்கையாக தொற்று நீக்க செயற்பாடுகளின் பின்னர் அவர்கள் கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்ப்பட்டிருந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மீளவும் தமிழ்நாட்டிற்கு அகுப்பி அனுப்பி வைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அருவி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக எல்லை தாண்டிவரும் தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதில்லை என இலங்கை அரசு தரப்பில் வெளிப்படையாக சொல்லப்பட்ட நிலையில் அண்மைய காலத்தில் வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழ்நாட்டு மீனவர்களால் வடக்கு மீனவர்களது தொழில் வளங்கள் தொடர்ச்சியாக சூறையாட்ப்பட்டும் சேதமாக்கப்பட்டு வருவதாக மீனவர் சமூகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, யாழ்ப்பாணம், வடமராட்சி