அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான மொடர்னா தயாரிப்பில் உருவாகும் கோவிட்19 தடுப்பூசி 25 முதல் 30 டொலர்கள் வரையான விலைக்குச் சந்தைக்கு வரும் என தலைமை நிர்வாகி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார்.
தேவையான தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு அமைய இந்தத் தொகை நிர்ணயிக்கப்படும் எனவும் அவா் கூறினார்.
சாதாரண காய்ச்சல் தடுப்பூசி ஒன்றுக்கு 10 டொலர் முதல் 50 டொலர் வரை செலவாகிறது. அதனைப் போன்றே மொடர்னா கோவிட்19 தடுப்பூசி விலையும் இருக்கும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
திங்களன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் மொடர்னா தடுப்பூசியின் மில்லியன் கணக்கான சொட்டுக்களை 25 டொலருக்கும் குறைவான விலையில் பெற்றுக்கொள்ள மொடர்னாவுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகக் கூறினார்.
எனினும் இதுவரை அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை. ஆனால் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளோம் என ஸ்டீபன் பான்செல் தெரிவித்தார்.
மொடர்னா தனது சோதனையின் இறுதிக் கட்டத்தில் உள்ள கோவிட்19 தடுப்பூசி 94.5% பயனுள்ளதாக இருப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா, உலகம்