யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் 40 பேர் இன்று காலை கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு இவர்கள் இன்று ஞாயிற்றுக் கிழமை (நவ-29) மாற்றம் செய்யப்பட்டனர்.
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்திய சாலை தற்காலிகமாக கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கி வந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த 30 பேரும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் இவ்வாறு கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி வைத்தியசாலை கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக இயங்கிய நிலையில் அங்கு செயற்பட்டுவந்த வெளிநோயாளர் பிரிவு பிறிதொரு இடத்திலேயே இடம்பெற்று வந்தது.
தற்போது மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இருந்து கொரோனாத் தொற்றாளர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வழமை போன்று வைத்தியசாலை செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் சகல வசதிகளுடனான வைத்தியசாலை அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. அதி நவீன கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தொற்று நோயியல் வைத்திய சாலை கொரோனா சிகிக்சை நிலையமாக இன்று தனது சேவையை ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, முள்ளியவளை, வடமராட்சி