வடக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதலாவது சர்வதேச போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முத்திரை பதித்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 11வது ஆட்டத்தில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணியும் கொழும்பு கிங்ஸ் அணியும் விளையாடியது.
அம்பாந்தோட்டை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று (டிச-04) இரவு நடைபெற்ற போட்டியில் ஜப்னா ஸ்டேலியன்ஸ் அணி சார்பில் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் தனது முதலாவது சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகியிருந்தார் வடமாகாணத்தை சேர்ந்த தமிழ் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்.
விஜயகாந்த் வியாஸ்காந்த், வட மாகாணம் கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவராவர்.
முன்னதாக விளையாடியிருந்த 4 போட்டிகளிலும் தொடர்ந்து வெறிறி பெற்று பலமான நிலையில் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி கொழும்பு கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
நாணயச் சுழற்சியில் வென்ற கொழும்பு கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்ததை அடுத்து ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதிகபட்சமாக டீ சில்வா 23 பந்துகளில் ஏழு 4 ஓட்டம், ஒரு 6 ஓட்டம் உள்ளடங்கலாக 41 ஓட்டங்களையும், அவிஸ்க்க பெர்ணான்டோ 26 ஓட்டங்களையும், பானுக 21 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய வியாஸ்காந்த் சுழற்பந்து வீச்சாளர் என்பதால் துடுப்பாட்ட வரிசையில் 11வது வீரராக களமிறங்கிய போதிலும் 4 பந்துகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது இருந்தமை குறிப்பிடத்தக்கது.
149 ஓட்டஙகைள எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை ஏற்படுத்தியதால் 201 வது ஓவர்வரை போட்டி விறுவிறுப்பாக சென்றது.
இறுதியில் 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் விதிதயாசத்தில் கொழும்பு கிங்ஸ் அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.
கொழும்பு கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பந்துவீச்சில் வனிண்டு ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும், டீ சில்வா மற்றும் வியாஸ்காந்த ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
சர்வதேச தரம் வாய்ந் துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக தனது முதலாவது போட்டியில் பந்து வீசிய வியாஸ்காந்த் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
4 ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந்த் 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஒரு அகலப்பந்து உள்ளடங்கியதாக 25 பந்துகளை வீசிய நிலையில் 10 பந்துகள் ஓட்டமற்ற பந்துகளாக வீசியிருந்தமை வியாஸ்காந்தின் பந்து வீச்சு திறமையின் சான்றாகும்.
ரீ-20 போட்டியில் ஓட்டமற்ற பந்துகளை வீசுவதென்பது சர்வதேச தரம்வாய்ந்த வீரர்களுக்கே பெரும் சவாலான விடயமாக இருக்கையில் வியாஸ்காந்த 10 பந்துகளை ஓட்டமற்ற பந்துகளாக வீசியமை சிறந்த விடயமாகும்.
அதுமாத்திரமல்லாது இலங்கை தேசிய அணியின் தலைவராகவும் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அதி சிறந்த துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தி வரும் ஏஞ்சலோ மத்தியூசை தனது முதலாவது விக்கெட்டாக வியாஸ்காந்த் வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தனிச்சிறப்பாகும்.
மென்மேலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி சர்வதேச அரங்கில் கால்பதித்து தமிழர்களது பெருமையை உலகறியச் செய்ய அருவி இணைய வாசகர்கள் சார்பில் அருவி இணையம் வியாஸ்காந்திற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி