யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் தொடர்ந்த குழப்ப நிலை தற்போது வரையில் தொடர்வதாக அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அங்கு கூடிய அரசியல் பிரமுகர்கள் பல்கலைக்கழக வாயிலுக்கு முன்பாக அமர்ந்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றாக அமர்ந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் உள்ளே நிற்பதாக கருதப்படுகின்ற துணைவேந்தரை சந்திக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்து கோசம் எழுப்பியவண்ணம் உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு கூடியுள்ளனர்.இதேவேளை,
யாழ்ப்பாணத்தின் பல பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கலகம் அடக்கும் பொலிஸாரும் உள்ளடக்கம்.
இராணுவத்தினரும் அங்கு பிரசன்னமாகியிருக்கின்ற சூழலில் அரசியல் பிரமுகர்கள் பல்கலைக்கழக வாயிலுக்கு முன்பாக தொடர்ந்தும் அமர்ந்து கோசம் எழுப்பிவருவதாக அருவியின் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம்