"யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படும். அதைத்தவிர வேறு எந்தத் தூபியும் புதிதாக இங்கு அமைக்கப்படுவதற்கு இடமளிக்கமாட்டோம்."
- இவ்வாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் மாணவர் ஒன்றியம் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-"யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டது. இதற்கு எதிராக உள்நாட்டில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும், உலக அரங்கில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இடிக்கப்பட்ட தூபியை மீள அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து தொடர் போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக வாயிலில் முன்னெடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளவும் அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்து தூபி அமைப்பதற்கான அடிக்கலும் நாட்டப்பட்டது ஆயினும், இந்தத் தூபியை மீள் அமைக்கப்படுவது தொடர்பில் சில சர்ச்சைகளும் வெளிப்படுத்தப்பட்ட வந்தன.
குறிப்பாக இந்தத் தூபியானது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அல்லாமல் பொதுவானது என்றும், சமாதானத் தூபி என்றும் பல கருத்துக்கள், பல செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தகைய கருத்துக்கள் - செய்திகளை அடியோடு மறுக்கின்றோம். யாழ். பல்கலைக்கழகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமையும். அதைத்தவிர வேறு எந்தத் தூபியும் புதிதாக இங்கு அமைக்கப்படுவதற்கு இடமளிக்கமாட்டோம்" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்