பீசிஆர் பரிசோதனையை புறக்கணித்தமையால் வாகன சுத்திகரிப்புநிலையத்துக்கு பருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையால் சீல்வைக்கப்பட்டது.
பருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையால் பிரதேசத்திலுள்ள அதிக ஆபத்துநிலைக்குரியவர்களை இனங்கண்டு அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் வர்த்தகர்கள் சாரதிகள் வாகன சுத்திகரிப்புநிலைய ஊழியர்கள் மற்றும் ஆபத்து பிரதேசங்களிலிருந்து திரும்புவோர் என முன்னிலைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த திங்கட்கிழமை பிசிஆர் பரிசோதனைக்காக குறித்த வாகன சுத்திகரிப்புநிலைய ஊழியர்கள் அழைக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் பரிசோதனைக்கு சமூகமளிக்கவில்லை.
இதுதொடர்பாக பொது சுகாதார பரிசோர்கள் அவ்விடம் சென்று பரிசோதித்தபோது அதன் உரிமையாளர் ஒத்துழைக்கவில்லை என்று பொதுச் சுகாதாரஉத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே கொரோனா கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்க மறுத்து பீசிஆர் பரிசோதனையில் பங்குபற்றாமையினால் எதிர்வரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட்டு முடிபுகள் கிடைக்கும் வரை அந்த நிறுவன செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தி சீல் வைக்கப்பட்டதோடு அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீண்ட தூர பயணங்களிலீடுபடும் பேருந்துகளின் சாரதி மற்றும் நடத்துனரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனாதொற்று வேகமாக பரவிவரும் நிலையில் நோய்பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார திணைக்களத்துக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனவும் இவற்றை மீறும் வகையில் செயற்படுவோர் மீது 1897 ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை