பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையுமான மக்கள் எழுச்சிப் பேரணியில் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவையும் மீறிக் கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பில் கலந்துகொண்டார் எனக் கூறி புகைப்படங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இல்லத்துக்கு இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்ற மட்டக்களப்புப் பொலிஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதன்போது தமக்கு எந்தப் பொலிஸ் நிலையங்களாலும் எந்தவித நீதிமன்றக் கட்டளைகளும் கிடைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி வாக்குமூலம் வழங்கினார் என்று அரியநேத்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"பேரணியில் நான் கலந்துகொண்டதாகக் கூறப்படும் கலர் புகைப்படங்களைப் பொலிஸார் என்னிடம் காண்பித்தனர். இதன்போது ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வது தவறில்லை என்பதை வலியுறுத்தினேன்.
பேரணியில் நான் கலந்துகொண்டது உண்மை எனவும், எனினும் நீதிமன்றத் தடை உத்தரவு எனக்கு வழங்கப்படவில்லை என்பதையும் பொலிஸாரிடம் மீண்டும் வலியுறுத்தினேன்.
எனது இல்லம் மட்டக்களப்பு மாவட்டம், படுவான்கரை பெருநிலம், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் அம்பிளாந்துறையில் இருக்கின்ற போதிலும் மட்டக்களப்புப் பொலிஸாரே இந்த வாக்குமூலத்தைப் பெற்றனர்" - என்றார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு