மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் பதிவுச்சான்றிதழ் அற்றவர்களுக்கான பதிவுச் சான்றிதல்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை இன்று நடைபெற்றது.
சேவகம் மற்றும் வரையறுக்கப்பட்ட மகளிர் கூட்டுறவு சங்கம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் இந்த நடமாடும் சேவை இன்று குடியிருப்பில் நடைபெற்றது.
இதன்போது திருமணமாகியும் இதுவரையில் திருமணத்திற்கான திருமணப்பதிவினைக் கொண்டிருக்காதவர்களுக்கு பதிவுகள் செய்யப்பட்டன.
இந்த நடமாடும் சேவையில் 40க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்துகொண்டு தங்களது திருமணங்களை காலம் பிந்தியதாக பதிவுசெய்துகொண்டனர்.
சேவகத்தின் சட்ட ஆலோசகர் திருமதி டயானா சுஜிவா புளோரங்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் மாவட்ட மேலதிக பதிவாளர் திருமதி புனிதவதி ஆனந்தன்,பிரதேச கிராம சேவையாளர் எஸ்.ஜெககோதரன்,அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சோ.வனஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நடமாடும் சேவையானது குடியிருப்பு, சவுக்கடி, தன்னாமுனை, மயிலம்பாவெளி ஆகிய பிரதேச மக்களினை அடிப்படையாக கொண்டு நடைபெற்றது.
இதன்போது பிறப்பு இறப்பு பதிவுகள் இல்லாதவர்களுக்கு அதனைப்பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இவ்வாறான நடமாடும் சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக சேவகத்தின் சட்ட ஆலோசகர் திருமதி டயானா சுஜிவா புளோரங்டன் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு