மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் உத்தேச வயது அத்தாட்சி பத்திரம் வழங்கும் நடமாடும் சேவை நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு தலைமையில் நடைபெற்றது.
நீண்டகாலமாக பிறப்பு, இறப்பு பதிவுகள், திருமணப் பதிவுகள், கிடைக்கப்பெறாமல் பிரதேச மக்கள் பெரும் சிரமமடைந்து காணப்பட்டனர்.
இவர்களது குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 18 கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறான குறைபாடுகள் உள்ளோர் அடையாளம் காணப்பட்டு அதற்கான தீர்வு வழங்கும் நடவடிக்கை பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளப்ட்டது.
இதற்கான திட்டம், மற்றும் நிதி அனுசரனை தொடர்பான நடவடிக்கையினை மட்டக்களப்பு காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 20 வருடகால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் சுய நிர்ணய உரிமையோடு கூடிய ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். இவர்களது இவ்வாறான குறைபாட்டினை காவிய சுய அபிவிருத்தி பெண் நிறுவனம் அடையாளம் கண்டு, இதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளும் முகமாக கிரான் பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு வலய பிரதிப் பதிவாளரின் ஆலோசனையுடன் இத் திட்டத்தினை முன்னெடுக்க முடிந்ததாக மேற்படி அமைப்பின் பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் கருத்து தெரிவித்தார்.
நிகழ்வில் சுமார் 200 இற்கும் மேற்பட்டோருக்கு உத்தேச வயது அத்தாட்சி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மட்டக்களப்பு கிழக்கு வலய பிரதிப்பணிப்பாளார் க.திருவருள்,மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் இ.சசிகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு