மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி அமைக்கும் பணி தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்ற போதும்,குறித்த வீதியில் அகழ்வு செய்யப்பட்டு வரும் மண் தொடர்ச்சியாக தனியார் காணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக எழுத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததோடு, குறித்த மண்ணை எழுத்தூர் பகுதியில் திருத்தப்படாமல் காணப்படும் வீதிகளுக்கு போட்டு செப்பனிட்டு தருமாறு உரிய அதிகாரிகளிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் வீதி பணியின் போது அகழ்வு செய்யப்பட்டும் மண் அப்பகுதியில் தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் நிறுவனத்தின் ஊழியரின் வீட்டிற்கும் குறித்த மண் கொட்டப்பட்டு வருகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வீதி அபிவிருத்தி பணியின் போது அகழ்வு செய்யப்படும் மண் எழுத்தூர் பகுதியில் உள்ள திருத்தப்படாமல் காணப்படும் வீதிகளுக்கு போட்டு செப்பனிட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்