முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் ஆண்டு தோறும் நினைவேந்தல் முன்னெடுக்கப்படும் நினைவு முற்றத்தில் காணப்பட்ட நினைவுச் சின்னம் அடித்து உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் நேற்று ஏற்பாட்டுக்குழுவினரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டிருந்த நினைவுக் கல் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இறுதிப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் காணப்படுகின்ற பகுதியில் நாட்டுவதற்காக அருட் தந்தையர்கள் தலைமையிலான பொதுக்கட்டமைப்பினரால் நினைவு வாசகங்கள் பொறிக்கப்பட்ட நினைவுக் கல் அங்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
அதனை அங்கு இறக்கவேண்டாம் என்று படையினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.கடந்த இரவு அந்தப் பகுதி முழுமையாக இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை அங்கு செய்தியாளர்களும் பிரதேச மக்களும் சென்று பார்த்தபோது இரவு இறக்கப்பட்டிருந்த கல் காணப்படவில்லை.
அதேபோல ஆண்டு தோறும் சுடரேற்றப்படும் இரண்டு கைகளுடன் காணப்படும் தீபம் அடித்து உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுக் காணப்படுவதாகவும் குறித் சின்னத்தைச் சூழ இருந்த கட்டுமாணங்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முள்ளிவாய்க்கால்