யாழ்ப்பாணம் மாவட்டம் தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு தப்பிச் சென்ற டிப்பர் ரக வாகனம் தேடப்பட்டு வந்த நிலையில் சற்று முன்னர் கொடிகாமம் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், கொடிகாமம் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினர் இணைந்து மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையின் தொடராக குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை வாகனத்தினைச் செலுத்திச் சென்ற சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனம் முல்லைத்தீவைச் சேர்ந்தது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விசாரணையின் தொடக்கத்தில் சாரதி தாம் இல்லை என்று தெரிவித்த போதிலும் பின்னர் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று பொலிஸ் வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.
இதேவேளை வாகனத்தில் கோவில் இடிக்கப்பட்டமைக்கான அடையாளம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
உணவகம் ஒன்றிற்காக வாகனத்தினை நிறுத்த முற்பட்டபோது அது இடிந்ததாக சாரதி தெரிவித்து வருவதாகவும் பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக குறித்த சம்பவத்தை மத ரீதியிலான பிணக்காக சித்தரிக்க சில சமூக வலைத்தளங்கள் முயன்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்