ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்கின்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாத்தி ராஜபக்ச அரசாங்கம் தன்னுடய நீதியற்ற செயலை இந்த உலகிற்கு மீண்டும் அம்பலப்படுத்தி நிற்கின்றது. நீதியையும் ஜனநாயகத்தையும் போதிக்கின்ற வல்லலரசு நாடுகளே உங்களுக்கு இலங்கையில் நடக்கின்ற அநீதிகள் புரியவில்லையா? என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட கொடூரமான தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவீரர் நாள் அன்று முள்ளிவாய்க்காலில் வைத்து இலங்கை அரச பயங்கரவாதம் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் எல்லைக்குட்பட்ட பெயர்ப் பலகையை புகைப்படம் எடுக்கச் சென்ற முல்லைத்தீவு ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியளாளரே இலங்கை இராணுவத்தால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவமானது அரச பயங்கராவாதத்தின் உண்மை முகத்தை காட்டி நிற்க்கின்றது
ராஜபக்ச அரசாங்கம் தன்னுடய நீதியற்ற செயலை இந்த உலகிற்கு மீண்டும் அம்பலப்படுத்தி நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்க்கு பயங்கரவாதம் என பெயர் சூட்டிய இந்த அரசு மீண்டும் முள்ளிவாய்க்காலில் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. இந்த உலக மேடையில் நாடகம் ஆடும் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்கும் சர்வதேச சமூகம் இந்த ஊடகசமூகத்தின் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தை நியாயம் கேட்கப்போகின்றதா?
உலகத்தின் பயங்கரவாத செயற்பாடுகளின் அதி உச்சகட்டநிலையை சிங்கள அரசு காட்டியிருக்கின்றது. சர்வதேசமே நீதியையும் ஜனநாயகத்தையும் போதிக்கின்ற வல்லலரசு நாடுகளே உங்களுக்கு இலங்கையில் நடக்கின்ற அநீதிகள் புரியவில்லையா? அல்லது இதுவும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த நடவடிக்கை என்று சொல்லி வேடிக்கை பார்க்கப் போகின்றீர்களா?
உலகத்தில் அநீதி நடக்கும் இடமெல்லாம் நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட ஐ.நா சபையே நீதி இங்கு நிலை நாட்டப்படுமா? ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கின்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாத்தி அதை அடக்கி எமது உரிமைக் குரலை அடக்க நினைக்கும் சிங்கள அரச பயங்கரவாதத்திற்குத் துணை நிற்காமல் நீதிக்கும் ஜனநாயகத்திற்குமாக குரல் கொடுக்கும் எமது ஊடகவியலாளர்களுக்கு நியாயம் பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.
இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழும் தாயக பூமியில் இவ்வாறு தொடர் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் ஊடகவியளாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வரை மாபெரும் மக்கள் போராட்டங்களை நாம் தொடர்ந்து நாடாத்தத் தயங்கமாட்டோம். யுத்தம் மௌனிக்கப்பட்ட இடத்தில் இருந்தே மக்கள் போராட்டம் மீள் எழுச்சி பெறும் என்பதனை நாம் இலங்கை அரசாங்கத்திற்க்குத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்