Friday 26th of April 2024 05:46:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிலேனி வசந்தகுமாருக்கு மட்டு.மாநகரசபையின் செயற்பாடுகளில் கலந்துகொள்ள தடை!

கிலேனி வசந்தகுமாருக்கு மட்டு.மாநகரசபையின் செயற்பாடுகளில் கலந்துகொள்ள தடை!


மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கிலேனி வசந்தகுமார் அவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளிலிருந்து கலந்துகொள்வதற்கு மாநகரசபையினால் ஒரு மாதகாலம் தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான சபை அமர்வினை தொடர்ந்து முதல்வரின் தலைமையுரை மற்றும் கடந்த கூட்டறிக்கை சமர்ப்பிப்பு என்பன இடம்பெற்றதை தொடர்ந்து மாநகரசபையின் பல்வேறு செயற்றிட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இதன்போது மாநகரசபையின் முன்மொழிவுகள் முதல்வரினால் முன்வைக்கப்பட்டு சபையின் அனுமதிகள் பெறப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுனரினால் மட்டக்களப்பு மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம் செய்துவைக்கப்பட்டமைக்காக மாநகர முதல்வரினால் ஆளுனர் மற்றும் பிரதம செயலாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சேவைகால நீடிப்பு வழங்குவதில் முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்பு காரணமாக குறித்த ஊழியர்கள் பாதிக்கப்படுவதாகவும் மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்த குறித்த ஊழியர்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் இங்கு பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் மாநகரசபையின் நிர்வாகத்தினரின் அசமந்தபோக்கு காரணமாகவே இந்த நிலை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.அவர்கள் முறையான வேலைத்திட்டங்களை குறிப்பிட்டு சபை அமர்வு நடைபெறுவதற்கு முதல் மாதத்தில் வழங்குவதன் மூலமே அது தொடர்பில் சபையில் சமர்ப்பித்து அவர்களுக்கான கால நீடிப்பினை வழங்கமுடியும்.

ஆனால் நிர்வாகத்தினர் குறித்த ஊழியர்களின் வேலைகள் தொடர்பில் இதுவரையில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் காலம் தாழ்த்தியும் அவர்கள் அறிக்கையினை சமர்ப்பிப்பதன் காரணமாகவே ஊழியர்களுக்கான காலநீடிப்பு இழுத்தடிக்கும் நிலையேற்படுவதாக தெரிவித்தார்.

இதன்போது விசேட நடவடிக்கை மேற்கொண்டு சேவைக்காலத்தினை நீடிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதேபோன்று 2020ஆம் ஆண்டு வேலைத்திட்டங்கள் முழுமையாக செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு இதுவரையில் இரண்டு திட்டங்களே மாநகரசபையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகரசபை ஆணையாளரின் செயற்பாடுகள் காரணமாக மக்களுக்கான சேவைகள் பெரும்பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக மாநகரசபை உறுப்பினர்கள் இதன்போது தெரிவித்தனர்.

இதன்போது மாநகரசபையின் முதல்வரின் முன்மொழிவுகளும் சமர்பிக்கப்பட்டு அதற்கான சபை அனுமதிகளும்பெறப்பட்டன. அத்துடன் மாநகரசபை உறுப்பினர் கிலேனி வசந்தகுமார் மாநகரசபை உறுப்பினர்களின் கையெழுத்துக்களைக்கொண்டு சட்ட விரோதமானமுறையில் மாநகரசபைக்கு எதிரான கடிதம் ஒன்றை வழங்கியிருந்தமை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் ச.கமலரூபன் அவர்கள் தான் அந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லையென மாநகரசபை முதல்வர்,உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதுடன் கடந்த அமர்வில் இது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் தான் அந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லையென ச.கமலரூபன் உறுதிப்படுத்திய நிலையில் அவருடன் செல்வி தயாளகுமாரி கௌரி அவர்களும் அவ்வாறான கடிதமொன்றில் தான் கையெழுத்திடவில்லையென பதிவுசெய்திருந்தார்.

இச்செயற்பாட்டின் ஊடாக கௌரவமான சபைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் குறித்த உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரப்பட்டதை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது சபையின் கௌரவத்தினை பேணும் வகையில் உறுப்பினர் கிலேனி வசந்தகுமாருக்கு ஒரு மாதகாலத்திற்கான சபை அமர்வு தடையினை விதிப்பதற்கும் அக்காலப்பகுதியில் தனக்கான ரபர் முத்திரைகள்,கடிதத்தலைப்பு,அடையாள அட்டையினையும் பாவிக்ககூடாது என்ற நிபந்தனையினையும் விதிக்கும் வகையிலான சபை அனுமதியை கோருவதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

எனினும் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள்,ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு உறுப்பினர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள்,ஈபிடிபி,சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் சபை வெளிநடப்பு செய்து வெளியேறிச்சென்றனர்.

எனினும் மாநகரசபையின் கலந்துகொண்டிருந்த ஏனைய உறுப்பினர்களில் ஏனைய உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய அதேவேளை சபையிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் நடுநிலை வகித்தார்.சபையில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE