யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வன்னி தோ்தல் மாவட்டங்களில் கடந்த 2015 –ஆம் ஆண்டு பொதுத் தோ்தலுடன் ஒப்பிடும்போது நேற்று இடம்பெற்ற பொதுத் தோ்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது.
ஏனைய அனைத்துத் தோ்தல் மாவட்டங்களிலும் கடந்த பொதுத் தோ்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை வாக்களிப்பு வீதம் குறைந்துள்ளது.
2015 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பு வாக்குப்பதிவு 2.8 வீதமும், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 2.44 வீதமும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 1.11 வீதமும் அதிகரித்துள்ளன.
எனினும் தேசிய அளவில் வாக்களிப்பு வீதமானது 2015 பொதுத் தோ்தலுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரியவருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடத்தப்பட்ட தேர்தலில் இரத்தினபுரி, குருநாகல் மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பாரிய சரிவைக் கண்டுள்ளது.
2015 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது குருநாகலில் வாக்குப்பதிவு இம்முறை 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இரத்தினபுரியில் 9.8 வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மதிப்பீடுகளின் அடிப்படையில் கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் வாக்குப் பதிவு 9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.
சில மாவட்டங்களில் வாக்குப் பதிவு வீதம் குறைந்தமைக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒரு காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் வாக்குப்பதிவு தேசிய அளவில் குறையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் வாக்குப்பதிவு தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்