தேசிய ரீதியான நெருக்கடிகளின் போது தமிழ் மக்கள் சார்பில் மக்கள் இயக்கமாக செயற்படும் ஏதுநிலையை ஏற்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமை பதவியை துறக்க நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.
"தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும்போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவதற்காகவே அதன் இணைத் தலைவர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதற்கு நான் தீர்மானித்துள்ளேன்" என்று சி.வி.விக்னேஸ்வரன் இன்று பிற்பகல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
"தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் இது தொடர்பாக நான் இன்று காலையில் பேசினேன். தமிழ் மக்கள் பேரவையைக் கட்சி சார்பற்ற வகையில் ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவான நிலையை உருவாக்குவதற்காகவே இணைத் தலைமைப் பதவியை இராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்துள்ளேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய தேசிய ரீதியான பிரச்சினைகள் உருவாகும்போது தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்களையும், கட்சிகளையும் ஒன்றிணைத்துச் செயற்படுவதற்கான சூழல் இதன்மூலமாக ஏற்படுத்தப்படும் என்பதால்தான் இவ்வாறான முடிவை நான் எடுத்துள்ளேன்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்