இலங்கையில் தொடர்ச்சியாக மூவரது உயிர்களை பலியெடுத்து தொடரும் கொரோனா 3வது அலையில் நேற்றைய தினம் மேலும் 351 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு 312 பேருக்கும், தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புபட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களில் மேலும் 36 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு நேற்றைய (ஒக்-25) தினம் 351 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 7875 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 89 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியவர்களது மொத்த எண்ணிக்கை 3803 ஆக உயர்வடைந்துள்ளது.நேற்றைய தினம் தொற்று உறுதியானவர்களுடன் சேர்த்து தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 4 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் மூன்றாவது அலை கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதன் பின்னர் கடந்த ஒரு வாரத்திற்குள் மூன்றாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று பதிவாகிய நாளில் இருந்து 10 மாத காலத்தில் 13 பேரே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் கொரோனா 3வது அலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை