திருகோணமலை நகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களது எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திருகோணமலை கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனத் தொற்று 3வது அலை பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டு திருகோணமலையில் கணிசமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும் அதன் பின்னர் நீண்ட நாட்களாக புதிய தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் (டிச-20) ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருகோமலை கோட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை உடனாடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு கிழக்கு மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டிருந்தது.ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று சந்தை கொத்தணி உருவாகி அம்பாறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் கணப்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலும் மருதனார்மடம் சந்தைக் கொத்தணி உருவாகி இதுவரை 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலும் ஒரே நாளில் 21 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை திருகோணமலை கொத்தணியின் தோற்றுவாயாக மாறும் அபாய நிலையின் அறிகுறியாகவே நோக்கப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலமே இந்த அபாய நிலையை கடந்து செல்ல முடியும் என சுகாதாரத் துறையினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை