யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்த முதியவர் பிரித்தானியாவில் இருந்து அண்மையில் ஊர் திரும்பியவர் எனத் தெரியவந்துள்ளது.
சிற்றம்பலம் இராசலிங்கம் (வயது-80) என்ற முதியவர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்திருந்ததாக நேற்றைய தினம் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு உயிரிழந்த முதியவர், யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் என்றும், கடந்த ஜூன்-29ஆம் திகதியே பிரித்தானியாவில் இருந்து ஊர் திரும்பியவர் என்றும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,பிரித்தானியாவில் இருந்து ஊர் திரும்பி தனது சொந்த இடமான அச்சுவேலி தோப்பு பகுதியில் வசித்துவந்த நிலையில் கடந்த தினத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது உடலத்தை பொறுப்பேற்ற சுகாதாரத் தரப்பினர் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்திருந்தனர். அங்கு அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே நேற்றைய தினம் அவரது மரணத்திற்கு கொவிட்-19 தாக்கமே காரணம் என கணடறியப்பட்டிருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொவிட்-19 உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் யாழில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிற்றம்பலம் இராசலிங்கம் அச்சுவேலி வைத்தியசாலை அத்தியட்சகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரிவித்த உறவினர்கள், ஊர் திரும்புவதற்கு முன்னதாக லண்டனில் பைசர் தடுப்பூசியை செலுத்தியுள்ளமைக்கான அட்டையை வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, இலங்கை, வட மாகாணம், அச்சுவேலி, யாழ்ப்பாணம்