வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும், மகாவலி எல் வலயம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நில அபகரிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் (பெப்-24) போராட்டத்தை முன்னெடுத்த சமயம் ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் ஜனாதிபதியின் செய்தியை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியதாக அறிய முடிகிறது.
இதன்போது குறித்த அதிகாரி, நில விவகாரம் குறித்து பிரதமரிடம் பேசுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும், அடுத்த வாரத்தில் ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோருடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பிற்கு அழைப்பதாகவும் தெரிவித்ததாகவும் இதனையடுத்து தமிழ் நாடாளுமன்ற உறுஞப்பினர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
இப் போராட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோநோகராதலிங்கம், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.கலையரசன்சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், கோத்தாபய ராஜபக்ஷ, ம.ஆ.சுமந்திரன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், கொழும்பு