Friday 26th of April 2024 04:35:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
அதிகரிக்கும் தொற்றுறுதி: வவுனியாவில் சில பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப் படுகின்றன!

அதிகரிக்கும் தொற்றுறுதி: வவுனியாவில் சில பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப் படுகின்றன!


வவுனியா கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களது எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் வுவுனியா மாவட்டதின சில பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கொத்தணியில் நேற்றைய தினம் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னணியில் வவுனியா மாவட்டத்தை முடக்குவது தொடர்பில் அவசர கலந்துரையாடல் இன்று காலை நடைபெற்றது.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (ஜன-12) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வரும் கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தொற்று அதிகரிப்பை அடுத்து வவுனியா மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வவுனியா மாவட்டத்தின சில பகுதிகளை முடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி, தாண்டிக்குளம் சந்தி, மாமடுவ சந்தி, பூந்தோட்டம் சந்திகண்டி வீதி இராணுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் மூலம் போக்குவரத்து கட்டுப்படுத்துவதுடன் அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் செல்வற்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் அரச உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையினை பாதுகாப்பு பிரிவினருக்கு அடையாளப்படுத்தி கடமைகளுக்கு செல்ல முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து வன்னி இராணுவ முகாம் வரையும், வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து மாமடுவ சந்தி வரையிலுமான பகுதிகள் முடக்கப்படுவதுடன் மக்கள் வெளிச்செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டு மக்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது தொடர்பிலும்,

தனிமைப்படுப்படும் பகுதிகளுடாக நகருக்குள் பிரவேசிக்கும் தனியார் , இ.போ.ச பேருந்துகள் நகரின் எப்பகுதியிலும் தரித்து நிற்பதற்கு தடை விதிக்கப்படுவதுடன் வைத்தியசாலைக்கு அருகேயுள்ள பேருந்து தரிப்பிடத்தில் மாத்திரம் பேருந்துகளை நிறுத்த முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், முடக்கப்படும் பகுதிகளில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயண வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையினையும் அமுல்படுத்துதல் போன்ற பல தீர்மானங்கள் இது வரை மேற்கொள்ளப்பட்டளதாகவும் அருவியின் பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ் விசேட கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி சங்கத்தினர், சமயத்தலைவர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE