புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் நாடு முழுவதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் எங்கள் இலக்கு பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அடிப்பதுதான். எத்தனை உயிர்கள் போனது என்பதை அரசுதான் தெரிவிக்க வேண்டும். நாங்கள் எண்ணிக்கை செய்யவில்லை என்று இந்திய விமானப்படை தளபதி பீரேந்திர சிங் தனோவா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகளின் தற்கொலை படை இந்திய ராணுவ வீரர்கள் வந்த வாகனத்தின் மீது நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக பாக்., எல்லையில் இருந்த பயங்கரவாதிகளின் முகாமை இந்தியாவின் விமானப்படை குண்டுகள் வீசி தாக்கியது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
இந்திய மக்களும் இந்த நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் இதற்கு பதிலடி கொடுக்க இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் விமானம் புகுந்தது. இதை சரியான நேரத்தில் கண்டறிந்து இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த முயற்சியின் போது இந்திய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது. இதன் விமானி பாராசூட்டில் தப்பிய போது தவறுதலாக பாக்., எல்லையில் இறங்கினார்.
அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. பின்னர் 2 நாட்களுக்கு கடந்து அவரை விடுதலை செய்தது. இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் நிருபர்களை இந்திய விமானப்படை தளபதி பீரேந்திர சிங் தனோவா கூறியதாவது:
மிக் 21 பைசன் ரக விமானங்கள் பழையவை அல்ல. நவீனமானது. இதைதான் விமானி அபிநந்தன் ஓட்டிச் சென்றார். ரேடார், விண்ணில் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை, மற்ற ஆயுத முறைகளை விட மிக் 21 பைசன் சிறந்த ஒன்றாகும். நாடு திரும்பிய அபிநந்தனுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் தகுதியுடன் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார். விமானத்தை இயக்குவாரா என்பது பின்னர்தான் தெரியும். தேவையான உடல்தகுதி பெற்ற பிறகு அபிநந்தன் பணிக்கு திரும்புவார்.
பாக்.,கில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தான் எங்களின் இலக்காக இருந்தது. அதனால் இலக்கை துல்லியமாக தாக்கினோம். அங்கு எத்தனை பேர் இருந்தனர். இறந்தவர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கிட முடியாது. இதுகுறித்து அரசுதான் தெளிவுப்படுத்த வேண்டும். சூலூர் விமானப்படை தளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது பயிற்சிக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.