"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச தரப்பினர் சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றனர். அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்படும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர். எனவே, இம்முறை ஜெனிவாவில் கோட்டாபய அரசு எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்."
- இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
ஜ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. மார்ச் 22ஆம் திகதி வரை அது நடைபெறுகின்றது. அதில் மார்ச் 20ஆம் திகதி இலங்கை விடயம் பரிசீலனைக்கு வரவிருக்கின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை அடியோடு நிராகரிக்க வேண்டும் எனவும், அந்தத் தீர்மானத்தைக் குப்பையில் தூக்கி வீச வேண்டும் எனவும் கோட்டாபய அரச தரப்பினர் கூறியுள்ளமை முட்டாள்தனமான கருத்தாகும்.
ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்மானம் இறுதியில் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஏனைய அனைத்து உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை கோட்டாபய அரச தரப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும். அந்தத் தீர்மானத்துக்கு மதிப்பளித்து அதனை இந்த அரசு அமுல்படுத்தியே ஆக வேண்டும்.
அதேவேளை, கோட்டாபய அரசு வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிட்டு சர்வதேச சமூகத்துடன் முட்டி மோதுவதால் ஜெனிவாவில் இம்முறை எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டியும் வரும்" - என்றார்.