ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
அடுத்தடுத்து 8 'கட்யுஷா' ரக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விமானப்படை தளத்தில் முன்பு அமெரிக்க படையினர் முகாமிட்டு இருந்ததாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த தளத்தில் இருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாகவும் ஈராக் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில ஏவுகணைகள் பலாட் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் விழுந்து வெடித்ததாகவும், ஒரு ஏவுகணை நுழைவுவாயில் பகுதியை தாக்கியதாகவும் சலாஹதின் மாகாண பொலிஸ் அதிகாரி முகமது காலில் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை விழுந்து வெடித்ததில் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஈராக் இராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
இராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அல்-ஆசாத் விமானப்படை தளம், எர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடந்த 8-ஆம் திகதி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
அல்-ஆசாத் விமானப்படை தளத்தை 17 ஏவுகணைகளும், எர்பில் தளத்தை 5 ஏவுகணைகளும் தாக்கியதாக கூறிய ஈரான், இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தெரிவித்தது.
ஆனால், தங்கள் படை தளங்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியது.
இதனால் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்களைக் குறிவைத்து மீண்டும ஏவுகணைத் தாக்குல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.