கனடாவின் ரொராண்டோ அருகே உள்ள மிகப்பெரிய அணு உலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியான குறுஞ்செய்தியால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கசிவு ஏதும் இல்லை என்றும் முன்னதாக வந்த செய்தி தவறு என்றும் அறிவிக்கப்பட்டதை அடுத்தே மக்கள் நின்மதியடைந்தனர்.
இந்நிலையில் தவறான தகவல் பரப்பப்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7:20 மணியளவில், டொராண்டோவிற்கு அருகிலுள்ள பிக்கரிங் அணுசக்தி உற்பத்தி நிலையத்தில் அணுக் கசிவு ஏற்பட்டதாக அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் காலை 8:06 மணிக்கு ஒன்ராறியோ மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக எந்த ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டது.
அணுமின் உற்பத்தி நிலையத்தில் எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை. செய்தி பிழையாக அனுப்பப்பட்டது என ஒன்ராறியோ மாகாண பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கெர்ரி ஷ்மிட் அறிவித்தார்.
மாகாண அவசரகால செயல்பாட்டு மையம் நடத்திய வழக்கமான பயிற்சியின் போது இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக ஒன்ராறியோ மின் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் பயிற்சியின்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் திட்டம் ஏதும் இருக்கவில்லை என அரச தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தவறு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சாதாரணமான தவறு இல்லை. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு. நீங்கள் முழு மாகாண மக்களையும் அச்சத்தில் உறைய வைத்துவிட்டீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் இதற்குப் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும் என ரொரண்டோ நகர வாசி ஒருவர் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ரொராண்டோவிலிருந்து கிழக்கே 45 கிமீ தொலைவில் உள்ள பிக்கரிங் அணு உற்பத்தி நிலையம் ஆறு அணு உலைகளைக் கொண்டுள்ளது. ஒன்ராறியோவின் மின்சாரத் தேவைகளில் 14 வீதத்தை இது ஈடு செய்கிறது
இந்த அணுமின் நிலையம் 2024 வரை பாதுகாப்பாக சேவையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.