யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட மூத்த சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன் அவர்களின் மறைவு சட்டத்தரணிகளுக்கு பேரிழப்பாகும். சட்டத்துறையில் மதிப்புற்றிருந்த பெரும் மேதையை இன்று இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கும்போது,
கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரனின் தந்தையும் மூத்த சட்டத்தரணியுமான சி.வி விவேகானந்தன் இன்று காலை எம்மை விட்டுச் சென்ற செய்தி எம்மை பெரும் துயரத்திற்குள்ளும் சோகத்திற்குள் இட்டுச் சென்றுள்ளது. அன்னாரின் இழப்பு சட்டத்தரணிகளாகிய எமக்கு பேரிழப்பும் பெரும் இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்துறையில் பல சட்டத்தரணிகளையும் ஆளுமை மிக்க பல நீதிபதிகளையும் உருவாக்கியதில் பெரும் பங்காற்றிய அன்னார் விட்டுச் சென்ற சமய, சமூகப்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் சட்டத்தரணிகள் சங்கம் ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றும்.
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக சட்டத்தரணிகள் சங்கத்தலைவரும் வவுனியா மாவட்ட மூத்த சட்டத்தரணியுமான எம். சிற்றம்பலத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.