ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் அவசியமற்றது எனத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தையை நடத்தத் தயார் எனவும் கூறியுள்ளார்.
ஈரான் முக்கிய படைத் தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் உள்ள இரு இடங்களில் அமெரிக்க இராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ரொக்கெட் தாக்குதல் நடத்தியது.
இதனால், கடந்த இரு வாரங்களாக அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கப் படை நிறுத்தப்பட்டுள்ள அல்-பலாத் விமானப் படை தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ரொக்கெட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஈராக் இராணுவம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் ஈராக் படையினர் 4 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இது குறித்து தனது ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக ஈரான் திணறி வருகிறது. எனவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கட்டாயம் உடன்படுவார்கள் என்றார்.
அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டால் அதை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. முடிவு ஈரானிடம் தான் உள்ளது. இதில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை எனவும் ட்ரம்ப் கூறினார்.