ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானின் ஒரே ஒரு பெண் வீராங்கனையான கிமியா அலிசாதே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ளார்.
போலித்தனம், பொய், அநீதி, ஆகியவை நிறைந்த ஈரானின் ஓர் அங்கமாக இருக்க தான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக 21 வயதாகும் அலிசாதே தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஒடுக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான பெண்களில் தானும் ஒருவர் என்றும் தனது வெற்றியை ஈரான் அரசு அதிகாரிகள் பிரசார கருவியாக பயன்படுத்தியதாகவும் அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அலிசாதே தெரிவிக்கவில்லை என்றாலும், அவர் சமீப காலமாக நெதர்லாந்தில் பயிற்சி மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016-ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஈரானிய பெண் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.
ஈரான் இராணுவத்தால் உக்ரேனிய விமானம் சுட்டு விழுத்தப்பட்டதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். இதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் கிமியா அலிசாதே நாட்டை விட்டு வெளியேறியதாக அறிவித்துள்ளார்.