பிலிப்பைன்ஸ் - டால் எரிமலை சீற்றமடைந்துள்ளதால் அதனைச் சுற்றியுள்ள 8000 மக்கள் இன்று திங்கட்கிழமை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிலிப்பைன்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும் 240 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
'பிலிப்பைன்ஸின் லுசான் தீவில் அமைந்துள்ள டால் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் எரிமலையிலிருந்து தீக் குழம்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு 240 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் அப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது' என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வெளியேற்றப்பட்டுள்ள 8000-க்கும் அதிகமான மக்கள் 36 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். . எரிமலை வெடிப்பு காரணமாக காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளதால் வெளியில் பயணிக்கும் மக்கள் அனைவரையும் முகமூடி அணிந்து செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
டால் எரிமலை கடைசியாக 1977 ஆம் ஆண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. 1911 ஆம் ஆண்டு டால் எரிமலை வெடித்ததில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினர். விவாசாய நிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்கக்கது.