காட்டுத்தீ பேரிடர் அவுஸ்திரேலியாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தலைமையிலான அரசின் செயற்பாடுகள் குறித்து அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
காட்டுத் தீ விவகாரம் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தலைமையிலான ஆளும் லிபரல் கூட்டணிக்கான மக்கள் ஆதரவிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.
ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் தடவையாக லிபரல் கூட்டணி மீதான மக்கள் ஆதரவு சரிந்து லேபர் கட்சிக்கான ஆதரவு கூடியிருப்பதாக தி அவுஸ்திரேலியன் இணையத்தளம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.
கடந்த டிசெம்பர் தி அவுஸ்திரேலியன் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பின் போது இருகட்சி விருப்பு அடிப்படையில் 52-48 என்ற விகிதத்தில் முன்னணியிலிருந்த லிபரல் கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து.
தற்போது லேபர் கட்சி 51 - 49 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
புதுவருடத்தில் 8 முதல் 11-ஆம் திகதிக்கு இடையில் சுமார் 1505 வாக்காளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பிலிருந்து இந்த முடிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்தக் கருத்துக்கணிப்பில் முக்கியமாக பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கான மக்கள் ஆதரவு 45 புள்ளியிருந்து 37 என்ற நிலைக்கு படு வீழ்ச்சியடைய எதிர்க்கட்சித்தலைவர் மீதான மக்கள் ஆதரவு 40 புள்ளியிலிருந்து 46 என்ற நிலைக்கு எழுச்சி கண்டுள்ளது.
மக்களின் விருப்பத்துக்குரிய பிரதமர் யார்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 43 - 39 என்ற விகிதத்தில் ஸ்கொட் மொறிஸனைப் பின்தள்ளி எதிர்க்கட்சித்தலைவர் . அந்தோணி அல்பானீஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
பேரிடர் முகாமைத்துவத்தில் ஸ்கொட் மொறிஸன் தலைமையிலான அரசு காண்பித்த மிக மோசமான அணுகுமுறைதான், லிபரல்கள் மீதான அதிருப்திக்கு காரணம் என்றும் மக்களின் பேராதரவை பெற்று உச்சத்திலிருந்த லிபரல் கூட்டணியை எட்டு மாதங்களில் ஒரு காட்டுத்தீ எரித்து கீழே வீழ்த்தியிருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.