இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் சுமார் 3000 பேர் சுய விருப்பின் அடிப்படையில் நாடு திரும்ப முன்வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர்கள் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முன்னெடுத்து அவர்களை அழைத்துவர சில மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்தியத் தலைநகர் புதுடில்லி சென்ற அவர், அங்கு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசியபோது அகதிகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது என தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.
இலங்கை திரும்பவுள்ள தமிழ் அகதிகளில் ஒரு தொகுதியினர் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் நாடு திரும்புவதற்கான காலக்கெடு குறித்து உடனடியாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தியாவில் சுமார் 90,000 இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 60,000 பேர் இலங்கை திரும்பலாம் என கணிப்பொன்று கூறுகிறது.
ஏனைய 30,000 பேர் இப்போது இந்தியாவில் குடும்பங்களாக அல்லது வேலைகளைக் கொண்டுள்ளனர். மேலும் சிலர் அங்கேயே இசைவாக்கம் அடைந்துள்ளதால் இலங்கை திரும்ப விரும்பவில்லை எனவும் அந்தக் கணிப்பு கூறுகிறது.