ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் இந்த ஆண்டிற்கான முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இதுவாகும்.
ஒட்டுசுட்டான் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தினை, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினம் தலைமையேற்று நடத்தினார்.
குறித்த கூட்டத்தில், பிரதேசத்தில் சட்டவிரோதமாக இடம்பெறும் மண்ணகழ்வு, சுகாதாரப் பிரச்சினைகள், உள்ளக வீதி, கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படுகின்ற பிரச்சினைகள், இரணைமடுக்குள நீரினை பெறுவது தொடர்பான பிரச்சினை, நன்னீர் மீன்பிடிப் பிணக்குகள், கல்வி தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி சிறீஸ்கந்தராசா, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர், புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் செ.பிரேமகாந், பிரதேசசபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.