"மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 18 ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் மரணம் வரையில் அதிகாரத்தில் இருக்கலாம் என்ற தீர்மானத்தை எடுப்பதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பயன்படுத்தப்பட்டதேயன்றி மக்களின் சேவைகளுக்காக அல்ல. அதேபோன்ற முயற்சியே தற்போது கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் முன்னெடுக்கப்படுகின்றது."
- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
பல்கலைகழக மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து தீர்வு தருவதைப் போன்று ஊடகங்களுக்கு முன்னாள் பாசாங்கு காண்பிக்கின்றனர் ராஜபக்சவினர்.
உண்மையில் அந்த மாணவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
எமது அரசின் மீது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் திட்டமிட்டு அரசியல் நோக்கத்துக்காகச் செயற்பட்டன. அவர்களது நோக்கம் நிறைவேறிய பின்னர் தற்போது அமைதியாக இருக்கின்றனர்.
வாக்களிக்கதாவர்களும் நாட்டில் மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த மாற்றங்களுக்குப் பதிலாக முன்னரைப் போன்று குடும்ப ஆட்சியும் சகோதர நியமனங்களுமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரச திணைக்களங்களுக்கும் குடும்ப நியமனங்களே வழங்கப்படுகின்றன" - என்றார்.