தமிழன் என்று ஒரு சொல் இருக்கும் வரை அவர்களின் விடுதலை மூச்சு ஒரு போதும் அடங்கிவிடாது என்று தெரிவித்துள்ளார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்.
தமிழர்களுக்கு தீர்வு முக்கியமில்லை. சோறுதான் முக்கியம் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக கேட்டபோதே சிவமோகன் எம்.பி. இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உங்களது சோறு எங்களது இரத்தத்தில் சேராது. நீண்ட கால இனமுறுகல் 30 வருட ஆயுதப் போராட்டத்தை சந்தித்திருந்தது. இந்த போராட்டத்தில் பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அநியாயமாக பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினரையும் சிங்கள தேசம் பலி கொடுத்திருந்தது என்பது வெளிப்படையான உண்மை.
இவ்வளவு பெரிய ஆயுதப் போராட்டத்தின் பின்னும் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன என்பதை சிங்களப் பேரினவாதம் உணர்ந்து கொள்ளத்தயாராக இல்லை என்பது தெரிய வருகிறது.
மீள்நிகழாமை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய இந்த அரசு மீண்டும் மீண்டும் இனமுறுகலை வளர்த்து விட்டுக் கொணடிருக்கிறது.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தமிழர்களுக்கு சோறுதான் முக்கியம், உரிமைகள் தேவை இல்லை என்ற கருத்தைத் தெரிவிதிதருந்தார். நீங்கள் தரும் சோறு எப்போழுதும் எங்கள் இரத்தத்தில் ஊறாது. தமிழன் என்று ஒரு சொல் இருக்கும் வரை அவர்களின் விடுதலை மூச்சு ஒரு போதும் அடங்கிவிடாது என அவர் மேலும் தெரிவித்தார்.