"ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பின்னணியில் பிரபலமான ஒருவர் இருக்கவேண்டும். அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார் என்பது ரஞ்சனின் குரல் பதிவொன்றின் மூலம் உறுதியாகின்றது. அதனால் இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவை விசாரிக்கவேண்டும். அதன் மூலம் பல விடயங்கள் வெளியில் வரலாம்."
- இவ்வாறு இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகள் மற்றும் பொலிஸாரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தனித்துச் செயற்பட்டிருக்கமாட்டார்.
அத்துடன் அவரின் குரல் பதிவுகளைப் பார்க்கும்போது ரணில் விக்கிரமசிங்க அவரின் நடவடிக்கைக்கு பின்னால் இருப்பது உறுதியாகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் பொறுப்புவாய்ந்த எவரும் இதுவரை எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை.
மேலும், அவர் இவ்வாறு செயற்படுவதற்கு பல்வேறு நோக்கங்கள் இருக்கலாம். ஆனால், அவரது குரல் பதிவுகளைக் கேட்கும்போது, நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டாலும் தான் தொலைபேசியில் உரையாடிய அதிகாரிகளை அச்சுறுத்தி அவரின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கத்திலே இதனைச் செய்திருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடிகின்றது. அதனால் இந்த விடயத்தை சாதாரணமாகக் கருதமுடியாது.
அவரின் பின்னணியில் பிரபலமான ஒருவர் இருக்கவேண்டும். ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார் என்பது அவரது குரல் பதிவொன்றின் மூலம் உறுதியாகின்றது. அதனால் இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவை விசாரிக்கவேண்டும். அதன் மூலம் பல விடயங்கள் வெளியில் வரலாம்" - என்றார்.