இலங்கையிலிருந்து 200 தேள்களைக் கடத்திச் செல்வதற்கு முயற்சித்த சீனப்பிரஜை ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் குவென்சூ நகர் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நீண்ட நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் அங்குமிங்கும் நடமாடியவாறு காணப்பட்டுள்ளார். இதன் போது குறித்த நபரை அவதானித்த கட்டுநாயக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.அவரின் கடவு சீட்டு இலங்கைக்கு வருகைதந்தமைக்கான காரணங்கள் என அனைத்தும் உரிய வகையில் காணப்பட்டுள்ளது.
ஆனால் விசாரணைகளின் போது குறித்த நபரின் கைகளில் பயணப்பொதிகள் காணப்படவில்லை. பின்னர் சீனாவிற்கு பயணிக்கவுள்ள விமானத்திற்கான பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பயணிகளுக்கான பொது அழைப்பு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபர் பயணப்பொதியுடன் சென்ற வேளையில் சுங்கப்பிரிவினர் பயணப்பொதியினை பரிசோதிக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் குறித்த சீன பயணி விமானத்திற்கு செல்ல வேண்டும் எனவும் நேரம் பற்றாக்குறையாக காணப்படுவதாகவும் தெரிவித்து பயணப்பொதியினை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாக பயணப்பொதியினை இலத்திரனியல் கருவிகொண்டு பரிசோதனை செய்த போது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள 200 அரிய வகை தேள்கள் உயிருடன் உள்ளே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த பயணி தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து தேள்களை வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.