ஈரான் இராணுவத்தால் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கனேடியர்கள் 63 பேர் உள்ளடங்கலாக 176 பேர் கொல்லப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கான லண்டனில் உள்ள கனேடிய தூதரகத்தில் சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பதிலளிப்பு குழுவின் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, உக்ரைன், சுவீடன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளன.
கடந்த வாரம் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரேனிய விமானம் ஈரானிய இராணுவ ஏவுகணைத் தாக்குலில் வீழ்த்தப்பட்டதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
ஆரம்பத்தில் பயணிகள் விமானம் சுட்டு விழுத்தப்பட்டதை ஈரான் மறுத்தது. பின்னர் அது தனிமனித தவறுகளால் நடந்ததாக வருத்தம் தெரிவித்தது.
விமானத்தை சுட்டு விழ்த்தியதைக் கண்டித்து உள்நாட்டிலேயே ஈரானுக்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பதிலளிப்பு குழுவின் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் அறிவித்துள்ளார்.
விமானம் வீழ்தப்பட்ட நிலையில் ஈரானின் புரட்சிகர இராணுவ படையணியை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஷாம்பெயின் இருவரும் கடந்த வாரம் ஈரானிய தலைவர்களுடன் விமானம் சுட்டு விழுத்தப்பட்டமை குறித்துப் பேசினர். இதன்போது விமானம் சுட்டு விழுத்தப்பட்டமை தொடர்பில் நம்பகமான விசாரணையின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் நம்பகமான விசரணை குறித்து சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பதிலளிப்புக் குழு மூலமும் அழுத்தம் பிரயோகிக்க கனடா திட்டமிட்டுள்ளது.