தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு சென்னையில் தங்கியிருந்த வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான கௌரவ முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை மூத்த ஈழ ஆதரவாளரான பழ.நெடுமாறன் அவர்களின் சார்பில் அவரது கட்சியின் பொதுச்செயலாளர் ஆவல் கணேசன் நேற்று திங்கட் கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் மூத்த ஈழ ஆதரவாளருமான பழ.நெடுமாறன் அவர்களை சந்திக்கும் முயற்சி வேறு சந்திப்பு நெருக்கடிகளால் கைகூடாமல் போயிருந்த நிலையில் பழ.நெடுமாறன் அவர்களின் சார்பில் அவரது கட்சியின் பொதுச்செயலாளர் ஆவல் கணேசன் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியதுடன் பழ.நெடுமாறன் அவர்களுடன் தொலைபேசியில் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
க.வி.விக்னேஸ்வரன் மற்றும் பழ.நெடுமாறன் ஆகிய இருவரும் தொலைபேசி ஊடாக அவரவர் உடல் நலம் குறித்து பரஸ்பரம் விசாரித்துக்கொண்டதுடன் ஈழத்தமிழரின் இன்றைய நிலை குறித்தும் உரையாடியிருந்தனர். தொடர் சந்திப்புகள் காரணமாக நேரில் சந்திக்க முடியாதிருந்தமையை எடுத்துக்கூறியதுடன் அடுத்தமுறை தமிழ்நாட்டிற்கு வரும்போது நிச்சயம் நேரில் சந்திப்பதாகவும் க.வி.விக்னேஸ்வரன் பழ.நெடுமாறன் அவர்களிடம் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை காலையில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை சென்னை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பிவைத்துள்ள தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஆவல் கணேசன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்களின் சார்பில் கடந்த 24/10/2018 அன்று நடைபெற்ற க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் கொள்கைப்பிரகடன கூட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், தமிழ் மக்கள் கூட்டணி கட்சி தொடங்கியமைக்கும் நேரில் வாழ்த்துக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.