பிலிப்பைன்ஸின் - லாவா எரிமலை குழம்புகளை கக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் அங்கு எந்நேரமும் அபாயகரமான வெடிப்பு ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மனிலாவின் தெற்காக 70 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் 'தால்' எரிமலை இன்று மூன்றாவது நாளாக பெரும் புகையைக் கக்கி வருகிறது. லாவா குழம்புகளும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் அந்த இடத்தைச் சுழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏரி ஒன்றின் நடுவில் அமைந்திருக்கும் தால் எரிமலை, உலகின் மிகச் சிறிய எரிமலைகளில் ஒன்றாகும். கடந்த 450 ஆண்டுகளில் இந்த எரிமலை குறைந்தது 34 தடவைகள் வெடித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு இந்த எரிமலை சீற்றமடைய ஆரம்பித்துள்ளது.
இது ஓர் அபாயகரமான வெடிப்புக்கான ஆபத்தை அதிகரித்திருப்பதாக எரிமலை மற்றும் நில அதிர்வு குறித்து ஆய்வு செய்துவரும் பிலிப்பைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரெனாடோ சொலிடும் எச்சரித்துள்ளார்.
அத்துடன் எரிமலை வெடிப்பினால் மண் சரிவு ஏற்பட்டு உருவாகும் பாரிய அலைகளைக் கொண்ட 'எரிமலை சுனாமி' பற்றியும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தால் எரிமலை பெரும் சத்தம் மற்றும் அதிர்வுடன் சாம்பல் புகையை வெளியிட ஆரம்பித்தது. இதனால் அந்தப் பிராந்தியத்தைச் 75 சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
தால் எரிமலை பகுதியில் இருந்து 14 கிலோமீற்றர் சூழவிருக்கும் அபாய வலயத்திற்குள் 450,000க்கும் அதிகமான மக்கள் வாழ்வதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் காற்றின் வேகத்தால் பல கிலோ மீற்றர் தூரத்திற்கு பரவி வருகிறது. இதனால் சுவாச நோய் பாதிப்புக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எரிமலையினால் வானில் ஏற்பட்டிருக்கும் சாம்பல் மற்றும் துண்டுகள் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மனிலா சர்வதேச விமானநிலையத்தின் அனைத்து விமானப் பயணங்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பிராந்தியத்தைச் சூழவிருக்கும் பாடசாலைகள் நேற்று மூடப்பட்டதோடு தலைநகர் மனிலாவில் சில அரச அலுவலகங்களும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டன.
கடைசியாக 'தால்' எரிமலை 1977ஆம் ஆண்டு வெடித்தது. 1911 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது 1500 பேர் வரை கொல்லப்பட்டனர்.
ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 20 சூறாவளிகளாலும், பல எரிமலை சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டு வரும் பிலிப்பைன்ஸ் நாடு பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது.
மனிலாவில் இருந்து வட மேற்காக சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பினடுபோ எரிமலையில் 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடிப்பே அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பாக இருந்தது. இதில் 800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.