இந்திய மைய அரசாங்கத்தில் உள்ள பா.ச.க. வின் அண்மைய குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக பரந்த அளவிலான கட்சிகளின் கூட்டத்தை, காங்கிரசு கட்சி கூட்டியிருந்தது. அதன் தலைவர் சோனியா தலைமையில் டெல்லியில் நேற்று திங்களன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் முதன்மைக் கட்சியான தி.மு.க. பங்கேற்கவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. தரப்பில் அமைதிகாத்துவந்த நிலையில், அக்கட்சியின் முதன்மைச் செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இந்தியாவின் ‘தி இண்டு’ நாளேட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அழகிரி வெளியிட்ட அறிக்கைதான், கூட்டத்தில் பங்கேற்காமைக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ள அவர், “ கூட்டணி தருமத்தை தி.மு.க. மீறிவிட்டது என அழகிரி கூறியபின்னர், எப்படி அவர்கள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கமுடியும்? அவருடைய அறிக்கை வந்ததும் சோனியா தலைமையிலான கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என காங்கிரசு மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நான் தெரிவித்தேன். அதையடுத்து, என்னிடம் பேசிய அகமது பட்டேல், அழகிரி வருத்தம் தெரிவித்ததாகக் கூறினார். ஆனால், அவருடைய அறிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை சரிக்கட்ட எதுவும் நடக்கவில்லை. அழகிரியின் அறிக்கையானது எங்கள் கட்சித் தலைமையை பாதிக்கச்செய்துள்ளது.” என்றார்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக, முன்னைய அறிக்கைக்கு வருத்தம்தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு அழகிரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.