சல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற மதுரையின் அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு நிகழ்வை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
முன்னதாக, அவனியாபுரம் சல்லிக்கட்டை நடத்திவரும் தனிநபர் பத்தாண்டுகளாக தன்னிச்சையாகச் செயல்படுகிறார்; முறையான வரவு செலவை பொதுவில் வைப்பதில்லை; ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைநிகழ்வில் பங்கேற்கவிடாமல் செய்கிறார்; எனவே, அவனியாபுரம் நிகழ்வுக்கான குழுவை மாற்றியமைக்கவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பலரும் வழக்குத்தொடுத்தனர். அதில், நீதிபதிகள் நீதிபதிகள் இரவீந்திரன், துரைசாமி ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பில், “ சனவரி 15-ம் நாளன்று நடக்கும் அவனியாபுரம் சல்லிக்கட்டில் ஓய்வுபெற்ற மாவட்டநீதிபதி சி.மாணிக்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு நடத்தும். இதற்கு 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழு தன் ஆலோசனையை எடுத்துக்கூறவேண்டும்” என்றும்,
“ அலங்காநல்லூரில் 17-ம் நாளன்று நடக்கும் சல்லிக்கட்டை இதே மாணிக்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறையின் தென்மண்டல சரகத் தலைவர், பேரூராட்சிகள் துறையின் மாவட்ட உதவி இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழுவானது நடத்தும்; அதற்கு 36 பேர் கொண்ட குழு ஆலோசனை வழங்கவேண்டும்” என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
இதேவேளை, பாலமேட்டு சல்லிக்கட்டு நிகழ்வை ஊரில் உள்ள பொதுமகாலிங்கசாமி மடத்துக் குழுவே நடத்தும்; ஓய்வு. நீதிபதி மாணிக்கம் குழு அதைக் கண்காணிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அலங்காநல்லூர் சல்லிக்கட்டுக்கான முதல்நிலை நிகழ்வாக அங்குள்ள முத்தாலம்மன் கோயில் முன்பாக பந்தல்கால் ஊன்றுதல் நேற்று நடைபெற்றது. முன்னதாக, பந்தல்கால் மரத்துக்கு சந்தனம், திருநீறு, பால், கோமியம் ஆகியவை கொண்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.