உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரானில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் விழுத்தப்பட்டு கனேடியர்கள் உட்பட 176 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொறுப்புக் கூறல் பொறிமுறைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என கனடாவின் எதிர்க்கட்சியாக கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கன்சர்வேடிவ் நிழல் வெளியுறவு அமைச்சர் எரின் ஓ டூல், நிழல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் பெசன், நிழல் பாதுகாப்பு அமைச்சர் பியர் பால்-ஹஸ் மற்றும் நிழல் போக்குவரத்து அமைச்சர் டோட் டோஹெர்டி ஆகியோர் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த விவகாரத்தில் துரிதமாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர்.
'உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் சுட்டு விழுத்தப்பட்டமைக்கான பொறுப்பை ஈரானிய ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் விளைவாக கனேடியர்கள் உட்பட 176 பேர் உயிர் இழந்தனர். உயிரிழந்தவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் இந்த இழப்பினால் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த கொடூரமான அட்டூழியத்திற்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறுவதை உறுதி செய்ய ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் லிபரல் கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் கீழ் வரும் விடயங்களை வலியுறுத்துவதாகவும் கன்சர்வேடிவ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட பாராளுமன்றம் 2018 இல் நிறைவேற்றிய கன்சர்வேடிவ் தீர்மானத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
2. ஈரான் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்குவதுடன், அவர்களின் சடலங்களை பொறுப்பேற்று குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த அட்டூழியத்தை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
3. சர்வதேச விசாரணைக்கு ஈரான் முழுமையாக ஒத்துழைக்காவிட்டால் அவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.