தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஸ்ரீலங்கா வந்தடைந்தார்.
அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலரை சந்தித்து அலிஸ் வேல்ஸ் கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமைகள், நீதி, ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு சுதந்திரம் மற்றும் திறந்த இந்து பசுபிக் வலய பொது அபிலாஷைகள் உள்ளிட்ட வலய மற்றும் இரு தரப்பு பிரச்சினைகள் குறித்து அலிஸ் வேல்ஸின் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்படும் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
இந் நிலையிலேயே அலிஸ் வேல்ஸ் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, விஞ்ஞான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, வலய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ரஷ்யா மற்றும் இலங்கை கவனம் செலுத்தவுள்ளது.
இதனிடையே சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ நேற்றிரவு (13) இலங்கையை வந்தடைந்துள்ளார். அவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரிய சிங்க உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளார்.