இங்கிலாந்து மற்றும் கனடாவில் இனி வரும் காலங்களில் நேரத்தை செலவிட இருப்பதாக இளவரசர் ஹரி மற்றும் மெக்கன் தம்பதி எடுத்த முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இளவரசர் ஹரிக்கும் மற்றும் அவரது மனைவி மெக்கனுக்கும் அரச குடும்பத்துடன் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஹரி கனடாவில் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் குடியேறவுள்ளதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன.
எனினும் இவையெல்லாம் வதந்தி என இங்கிலாந்து அரச குடும்பம் அறிவித்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து தாம் விலகுவதாகவும் இனி வரும் காலங்களில் பிரிட்டன் மற்றும் கனடாவில் தங்களது நேரத்தை செலவிட இருப்பதாக புதன்கிழமையன்று ஹரி அறிவித்தார்.
இளவரசர் ஹரியின் இந்த முடிவை இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் இளவரசர் ஹரி - மெக்கனின் முடிவு குறித்து நேற்று திங்கட்கிழமை இங்கிலாந்து ராணி ஆலோசனை நடத்தினார்.
இதன் முடிவில் ஹரி மற்றும் மெக்கனின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ஹரி – மெக்கன் தம்பதியினர் கனடா வான்கூவர் தீவில் முன்னர் சுற்றுலாவுக்கு வந்திருந்தபோது தங்கிய இடத்தில் குடியேறவுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் - டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹரி தனது தோழியும் காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.